Monday, April 30, 2012

அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி?

,
   வேதங்களும் உபநிஷதங்களும் பல விஞ்ஞான கருத்துகளை பேசுவதாக சொல்கிறீர்கள்

 அவைகளில் வானவெளியில் கிரகங்கள் விழுந்து விடாமல் சுற்றுவது எப்படி? என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்

அவருக்கு அப்போது நான் சொன்ன பதிலை இங்கு வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பிரசன்ன உபநிசத்தில் பிற்பலாத மகரிஷி இந்த கேள்விக்கு மிக சரியான பதிலை தருகிறார்.  கடவுள் மக்களின் நலத்திற்காக இந்த பிரம்மாண்டமான பூமி சூரியன், சந்திரன் முதலிய கிரகங்களை படைத்து அவைகளை பிராண சக்தி, பிரம்ம சக்தி, பராசக்தி போன்ற சக்திகளால் இயக்கி சுழல விட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது அவரது பதிலாகும்.


  இதை மேம்போக்காக பார்க்கும் போது குழப்பமாகவும் நம்புவதற்கு கஷ்டமாகவும் இருக்கும்.

 இந்த வாசகத்தின் கருத்துக்களை மாறுபட்ட கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் போது சில உண்மைகள் தெரியவரும்.

 உதாரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் போது கீழே விழாது.  ஓட்டம் நின்று விட்டால் மறு வினாடியே கீழே சாய்ந்து விடும்.

  சக்கரம் சுற்றும் போது அதிலிருந்து கிளம்பும் ஒரு விதமான விசை பூமியின் ஆகர்ஷன சக்தியோடு எதிர்மறை உறவை ஏற்படுத்தி கீழே விழாமல் தாங்கி கொள்கிறது.

 பூமிக்கு சக்தி உண்டு.  ஆகர்ஷன சக்தியை தான் பிற்பாலாத மகஷி ஆன்மிக பரிபாஷையில் பராசக்தி என அழைக்கிறார்


  கிரகங்களில் உள்ள ஆகர்ஷன சக்தியும் சூரியனிடமுள்ள பிரம்ம சக்தி என்ற உஷ்ண மின்காந்த சக்தியும் இணையும் போது சமநிலை சக்தி என்ற பிராண சக்தி உருண்டு விழுந்து விடாமலும், சரிந்து விழுந்து விடாமலும் தாங்கி கொள்கிறது.

 பூமியின் சுழற்ச்சி வேகம் நிமிடத்திற்கு நாற்பதாயிரம் கிலோ மீட்டராகும்.

 இத்தனை வேகத்தில் சுற்றுவதனால் பூமியின் ஆகர்ஷன சக்தியானது குறையாமலும், கூடாமலும் இருக்கிறது.

 இந்த நிலை தான் மற்ற கிரகங்களுக்கும்

 அறிவியல் கருவி கொண்டு விஞ்ஞானம் அறிந்த இந்த உண்மைகளை எந்த வித புறக்கருவிகளும் இல்லாமல் ஆத்ம சக்தியொன்றையே துணையாக கொண்ட நமது ரிஷிகள் கூறியிருப்பது சிறப்பான வியப்பேயாகும்

Thursday, April 26, 2012

பிள்ளையார் வழிபாடு

மருமகனுக்கு தோப்புகரணம் போட்ட பெருமாள் !

,
இந்து மத வரலாற்று தொடர் 25

    பிள்ளையார் வழிபாடு என்பது இன்று நேற்று உருவானது அல்ல கல்பகோடி காலமாக மக்கள் மத்தியில் நின்று நிலைத்து தொடர்ந்து வரும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது கணபதி வழிபாடாகும். எங்கெல்லாம் ஆலமரம், அரசமரம், வன்னிமரம், வேப்பமரம், ஆற்றங்கரை, குளக்கரை, முச்சந்தி, மலை, சந்து, நாற்சந்தி, வீட்டு மாடங்கள் ஊர் கோடி இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பிள்ளையார் கனஜோராக வீற்றிருப்பார். 

எண்ணில் அடங்காத விநாயகர் இருப்பது போலவே அவரது திருவுருவமும் எண்ணில் அடங்காத பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் கையில் மிக சுலபமாக எந்த பொருள் கிடைக்கிறதோ அதை கொண்டு பிள்ளையாரின் திருமேனியை சமைத்து விடலாம். களிமண், பசும்சானம், பசு வெண்ணெய், பனைவெல்லம், மஞ்சள், கருங்கல், உலோகங்கள், வெள்ளை சலவைகள், அத்திமரம், வெள்ளருக்கன் வேர் ஆகியவற்றால் பெருவாரியான விநாயகர் உருவங்கள் செய்யப்படுகின்றன.



இதில் விழாவிற்கு ஏற்ற பொருளும் பயன்படுத்த படுகிறது உதாரணமாக பிள்ளையார் சதுர்த்தி நாளில் யாரும் சந்தனத்தாலோ, மஞ்சளாலோ பிள்ளையார் பிடிப்பது கிடையாது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்துக்கள் வீடுகளிலும். ஆலயங்களிலும் அன்று களிமண் கொண்டே பிள்ளையாரின் திருவுருவம் செய்யப்படுகிறது, அதே போலவே நமது தமிழ் நாட்டில் பொங்கல் திருநாள் அன்று பிள்ளையார் பசுசானத்தில் மட்டுமே செய்யப்படுவார். இது தவிர பண்டிகை மற்றும் விஷேச விரத தினங்களில் மஞ்சள் பிள்ளையாரே வழிபாட்டில் வைக்கப்படுகிறார்.

பொதுவாக கருங்கல் பிள்ளையாரை யாரும் வீட்டில் வைத்து அதிகமாக வழிபாடு நடத்துவது கிடையாது. கருங்கல் மற்றும் உலோகங்களில் செய்யப்படும் பிள்ளையார் ஆலயங்களிலேயே ஸ்தாபிக்க படுகிறார்கள். இது தவிர விஷேசமான பொருட்களாலும் பிள்ளையாரின் உருவங்கள் உருவாக்கபடுகின்றது ஒருவகை நுரையால் உருவாக்கப்பட்ட வெள்ளை வாரணர் சிலை கும்பகோணத்தில் உள்ள திருவலஞ்சுழி ஆலயத்தில் மக்கள் வழிபாட்டிற்கு வைக்கபட்டிருக்கிறது.



இப்படி பல பொருட்களாலும் விநாயகர் திருமேனிகள் செதுக்க பட்டாலும் மிக சிரேஷ்டமான விநாயகர் திருவுருவம் என்பது வெள்ளருக்கன் வேரில் உருவாக்கப்பட்டதே என்று பல ஞானிகளும் அனுபூதிமான்களும் சொல்கிறார்கள். குறிப்பாக வெள்ளருக்கன் விநாயகரின் தெய்வ நல ஆற்றலை அகத்திய மாமுனிகள் புகழ்ந்து பேசுவதை குறிப்பிட வேண்டும். இன்று விநாயகர் சதுர்த்தி விழா வந்து விட்டால் தெருவுக்கு தெரு அவர் உருவத்தை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த படுகின்றன அப்படி வழிபாட்டிற்கு ஏற்ற விநாயகர் உருவத்தை சில செயற்கை இழைகள் கொண்டு தயாரிக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செய்யப்படும் விநாயகர் உருவங்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த பொருளை கொண்டு விநாயகர் உருவங்களை செய்வது சாஸ்திர விரோதமான செயலாகும். களிமண் மற்றும் செம்மண்ணை பயன்படுத்தியே பெரிய விநாயகர் உருவங்கள் செய்ய வேண்டும்.

இலக்கிய உலகில் கவி அசுரர் என்று புகழப்படும் கச்சியப்ப முன்னிவர் தாம் இயற்றிய தணிகை புராணத்தில் விநாயகரின் திருகோலத்தை மிக அற்புதமான கவி நயத்துடன் விளக்குகிறார். விநாயகரின் ஐந்து கரங்களில் ஒன்று மோதகம் ஏந்தியும் மற்றொன்று தீர்த்த கலசம் ஏந்தியும் வேறொன்று தந்தத்தை ஏந்தியும் மற்ற இருகைகளில் அங்குசமும் பாசமும் தரித்து காணப்படுவது ஏன் என்ற விளக்கத்தை நமக்கு தருகிறார். 



சுவை மிகுந்த மோதகம் ஏந்திய கரத்தை தனக்காகவும் தந்தம் ஏந்திய கரம் தேவர்களை பாதுகாப்பதற்காகவும் தீர்த்த கலசம் ஏந்திய கரம் அம்மையப்பனாகிய உமா மகேஸ்வரனை வழிபடுவதற்காகவும் பயன்படுத்துகிறார். இத்தகைய தெய்வ காரியங்களுக்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்தும் கணபதி தன்னை வழிபடும். பக்தர்களுக்காக அங்குசம் பாசமுடைய இருகைகளையும் பயன்படுத்துகிறார் என்பது கச்சியப்ப முனிவரின் அழகிய கவிதை வாக்காகும். 

விநாயக பெருமானின் திருவிளையாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என்று அவரை பற்றி புகழ்கின்ற புராணங்கள் பறையறிவிக்கின்றன குறிப்பாக கஜமுகா சூரனை வதைத்து முனிவர்களை காத்த விதத்தையும் திரிபுர சம்ஹாரத்தின் போது சிவ பெருமானின் ரத அச்சை ஒடித்த விதத்தையும் வியாச பகவான் சொல்ல சொல்ல மகாபாரதம் முழுவதையும் மேரு மலை சரிவுகளில் ஒற்றை கொம்பால் எழுதியதையும் வள்ளி திருமணத்தின் போது யானை வடிவாக வந்து முருக பெருமானுக்கு உதவி புரிந்ததையும் ஒளவை பாட்டியாரின் பக்திக்கு மெச்சி அவரை ஒரே மூச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்ததையும் அகத்திய முனிவர் கமடலத்தை கவிழ்த்து காவேரி நீர் பெருக்கெடுக்க செய்ததையும் எவராலும் மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. 



இதுமட்டுமல்ல நாயன்மார்கள் அருளிசெய்த தேவார திருமறைகள் மறைந்து கிடந்த போது அவற்றை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நம்மியாண்டார் நம்பிகளுக்கு பல வகையில் வினயாகர் புரிந்த அருளும் உதவியும் சரித்திர புகழ் வாய்ந்தவைகள் இது தவிர ஏராளமான அருள் லீலைகளை விநாயகர் அன்றும் செய்துள்ளார் இன்றும் பலரின் வாழ்க்கையில் செய்து வருகிறார். அவரது அருள் விலாசத்தை எழுதிக்கொண்டே போவது என்றால் எழுதவும் சலிக்காது படிக்கவும் சலிக்காது.

அவருடைய லீலைகள் மட்டுமல்ல அவருக்கென்று சிறப்பாக இருக்கும் வழிபாட்டு முறைகள் கூட சலிப்பு ஊட்டாத சோர்வடைய செய்யாத வழிமுறைகளாகும். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு வழிபாடு ஒன்று விநாயகருக்கு உண்டு அதாவது தோப்புகரணம் போடுவது. யாரவது சிவனுக்கோ பெருமாளுக்கோ தோப்புகரணம் போட்டு கேள்வி பட்டிருக்கிறீர்களா? பிள்ளையாருக்கு மட்டும் தான் தோப்புகரணம் போட முடியும். போடவும் வேண்டும். இப்படி தோப்புகரணம் போடுவதற்கு மிக நளினமான புராண பின்னணி இருக்கிறது. 



காக்கும் கடவுளான திருமாலின் திருவிரலில் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரத்தை நாம் அறிவோம். அந்த சக்கரத்தை ஒருமுறை திருமாலின் தங்கை மகனாகிய விநாயகர் தூக்கி விழுங்கி விட்டாராம் தெரு பிள்ளையாக இருந்தால் தண்டிக்கலாம் தவறை செய்தது மருமக பிள்ளையாச்சே தண்டிக்க முடியுமா? கெஞ்சி கூத்தாடி தான் வாங்க வேண்டும். இதானால் திருமால் எத்தனையோ வேடிக்கை விளையாட்டுகளை பிள்ளையாருக்கு காண்பித்து ஒன்றும் பயன்தராமல் போகவே தோப்புகரணம் போட ஆரம்பித்து விட்டாராம்.

இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்து கொண்டு திருமால் உட்கார்ந்து எழுந்த நிலை விநாயகருக்கு வேடிக்கையாக இருந்ததாம். தனது அழகான தொப்பை வயிறு குலுங்க குலுங்க சிரித்தாராம் இதனால் விழுங்கிய சுதர்ச சக்கரம் வெளியே வந்து விழுந்ததாம். இது தான் தோப்பு கரணத்திற்கு சொல்லப்படும் புராண பின்னணியாகும். இந்த கதையில் குழந்தையின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் இறங்கி வந்து கூத்தாடினால் கிடைக்கும் சுகமே தனி என்ற அனுபவ விளக்கத்தை பெறுகிறோம்.


பொதுவாக தோர்ப்பி+கரணம் என்பதே தோப்புகரணம் என்று வழக்கு மொழியில் சொல்லப்பட்டு வருகிறது கரணம் என்ற வடமொழி சொல்லுக்கு காது என்பது பொருளாகும் தோர்ப்பி என்றால் கைகளால் பிடித்து கொள்ளுதல் என்பதும் பொருளாகும் அதாவது கைகளால் காதுகளை பிடித்தல் என்பதே தோப்பு கரணம் என்ற வார்த்தையின் அர்த்தமாகும். தோப்புகரணம் போடுவதற்கு நிஜமான காரணம் ஒன்று உண்டு இந்து மத வழிபாடுகளில் உள்ள நடைமுறைகள் அனைத்துமே பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும். மிக குறிப்பாக உடல் நலத்தையும் மன நலத்தையும் சமூக நலத்தையும் மையமாக வைத்தே இந்து மத சடங்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தோப்புகரணம் போடும் போது காதுகளை இறுக பற்றிக்கொண்டு உட்கார்ந்து எழுகிறோம் இதனால் நமது நரம்புகள் சுருங்கி சோர்வடைந்து போகாமல் இரத்த ஓட்டம் நல்லபடியாக இருக்கும் அளவு சுறுசுறுப்பு அடைகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகளில் உள்ள கொந்தளிப்புகள் அடங்கி சாத்வீக சிந்தனைகள் ஏற்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியம் என்பதற்காகவே விநாயக வழிபாட்டில் மண்டையில் குட்டி கொண்டு தோப்புகரணம் போடும் முறை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.



தோப்புகரணம் மட்டுமல்லாது பிள்ளையார் சுழி என்பதும் கணபதி வழிபாட்டில் உள்ள சிறப்பான அம்சமாகும். சிவ சுழி, விஷ்ணு சுழி, சக்தி சுழி என்று எந்த சுழிகளும் கிடையாது. விநாயகருக்கு மட்டுமே தனிப்பட்ட ரீதியில் பிள்ளையார் சுழி இருப்பது விளையாட்டுக்கு இல்லை அதனுள் அதி அற்புதமான தத்துவம் அடங்கி உள்ளது விநாயகர் என்றாலே அகரம்,உகரம்,மகரம் கலந்த பிரணவ வடிவம் என்று முன்பே அறிந்தோம் விநாயகர் மட்டுமல்ல அவர் சுழியும் பிரணவ வடிவானது தான் மேலும் பிள்ளையார் சுழியில் சகல தெய்வ வழிபாடுகளும் அடங்கி இருக்கிறது. 

பிள்ளையார் சுழியில் உள்ள வட்ட வடிவம் சிவ சக்தி பீடம் என்ற ஆவுடை என்றும் நீண்டும் நிற்கும் கோடு மூல தம்பம் என்னும் சிவலிங்கம் என்றும் சொல்லபடுகிறது. இவற்றை விந்து என்றும் நாதம் என்றும் ஞானிகள் அழைக்கிறார்கள். பிள்ளயார் சுழியில் உள்ள வட்ட வடிவம் மூலாதார பீடம் என்றும் நீள வடிவம் பிரம்ம நாடி எனவும் அது மூல கணபதி நிலையம் என்றும் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள். பிள்ளயார் சுழியை பற்றி அது எழுத்துகளின் வித்து எனவும் மவுன குறி என்றும், ஊமை ஒலி என்றும் பல சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றன. 

பிள்ளையார் சுழி உள்ள முதல் சுழி சிவனையும் அதை சுற்றி மேலே எழுந்து கீழே வரும் குறியீடு விஷ்ணு எனவும் நீளும் பகுதி பிரம்மன் எனவும் சொல்லப்படுகிறது. எனவே கண்களை மூடி ஒரு நிமிடம் தியானித்து போடுகின்ற சிறிய பிள்ளயார் சுழியில் நாத வடிவான பிரணவத்தையும் வணங்க்கிறோம் சிவ சக்தியாகிய அம்மையப்பனையும் வணங்குகிறோம். முத்தொழில் செய்து மூவுலகையும் காக்கும் மும்மூர்த்திகளையும் வணங்குகிறோம்.எனவே விநாயகர் என்ற ஒரே மூர்த்தியில் சகல மூர்த்தியும் அடங்கி விடுகிறது. 




அறிவுரையல்ல! அனுபவம்!!

அறிவுரையல்ல! அனுபவம்!!

,

 காலம் வேகமாக போகிறதா மனிதன் வேகமாக போகிறானா என்பது பல நேரங்களில் புரிவதில்லை தினசரி பல ஆண்களையும் பெண்களையும் சந்திக்கிறேன் படித்தவன் பாமரன் அறிவாளி முட்டாள் நல்லவன் கெட்டவன் என்று அனைவருமே எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கலில் இருப்பதாகவே சொல்கிறார்கள்

  இந்த உலகில் யாருமே நிமதியாக இருபதாக தெரியவில்லை உண்மையில் மனிதனாகப் பிறந்தவன் எவனுக்குமே மனதில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவே ஏற்படாதா? 


   இதைப்படிக்கும் நீங்கள் இப்படிக்கூட கேட்கலாம் நாங்கள் சமதானமாக இல்லை எழுதுகின்ற நீ மட்டுமாவது சாந்தியோடு இருக்கிறாயா?என்று நிச்சயம் உண்மைய சொல்வதானால் நானும் சாதாரண மனிதன் போலத்தான் இருக்கிறேன்

  எதற்காக நாம் அனைவரும் திருப்தி இல்லாமல் வாழ்கிறோம் இப்படிப்பட்ட வாழ்வை நமக்குத் தந்தது கடவுளா? அல்லது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட செயற்கை துன்பமா?

   இரண்டு இளம் சாதுக்கள் நதிக்கரையோரம் நடந்து போனார்கள் இருவருமே சிறந்த தபஸ்வி நல்ல ஞானம் நிறைந்த சுத்தாத்மாக்கள் மிகத்தீவிரமான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர்கள்




  அருகிலுள்ள கிராமத்தில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வரத்தான் இருவரும் புறப்பட்டிருந்தனர் ஆற்றில் நல்ல வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது சுழித்து சுழித்து நுங்கும் நுரையுமாய் புது வெள்ளம் ஓடுகின்ற காட்சி அவர்களின் மனதில் சந்தோஷ பிரவாகத்தை அதிகரித்து கொடுத்தது

  அந்த வேளையில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதை கண்டனர் அதைப்பார்த்ததும் ஒரு சாது சட்டென்று ஆற்றில் குதித்து நீந்திச் சென்று அந்தப் பெண்ணை தோளில் தூக்கிவந்து கரையில் படுக்க வத்து முதலுதவி செய்து காப்பாற்றி விட்டு தனது துறவறத் தோழருடன் ஆலைய தரிசனத்திற்கு சென்று விட்டார்

  இரண்டு நாட்களும் கடந்து விட்டது பெண்ணைக் காப்பாற்றியவர் உடன் வந்த சாது மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் கலகலப்பாக எதுவும் பேசவில்லை இவரின் இந்தநிலை அவருக்கு புரியவில்லை அதனால் ஏன் இப்படி சோர்வாகவும் கவலையாகவும் இருக்கிறீர்கள் உடல் நலத்தில் எதாவது குறையா? என்று கேட்டார்


    அதற்கு இவர் உடலுக்கெல்லாம் ஒன்றும் குறைவில்லை மனதில்தான் ஒருகவலை வாட்டி வதைக்கிறது என்றார் அப்படியா அது என்னக் கவலை என்று அவர் விளம்பினார்

 அன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ண நீங்கள் தொட்டுத் தூக்கி கரைசேர்த்தது தவறு நாம் பெண்களைத் தொடக் கூடாதென சங்கல்ப்பம் செய்திருக்கிறோம் அந்த சங்கல்ப்பத்தை மீறி நீங்கள் நடந்து விட்டீர்கள் என நான் நம்புகிறேன் என்றார்

 இவரின் இந்தப் பேச்சைக் கேட்டு அவர் கடகடவென சிரித்து விட்டார் பெண்ணைத் தொடக்கூடாது என்றால் காமத்தோடு தொடக்கூடாது என்பதுதான் விரதமேத்தவிற காப்பாற்றவும் தொடக்கூடாது என்பதல்ல விரதம்




  மேலும் நான்அந்தப் பெண்ணை தொட்டுத் தூக்கி எப்போதோ இறக்கிவைத்து விட்டேன் நீங்கள் தான் இரண்டு நாட்களாக சுமந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்

  நாமும் அப்படித்தான் இறக்கி வைக்க வேண்டிய சுமைகள் எல்லாவற்றையும் தூக்கி சுமந்து கொண்டு திரிகிறோம் அதனால்தான் இதயப் பாரம் தாங்க மாட்டாமல் வாழ்கை பாதையில் வழிநடக்க முடியாமல் சோர்ந்து போய் தள்ளாடுகிறோம்

 இதுதான் நமது துன்பத்தின் மூலக்காரணம் சுத்தமான நம் இதயத்தை தேவையற்ற நினைவுக் குப்பைகளால் நிறைத்து வைத்திருக்கின்றோம் அந்தப்பாரம் அழுத்த அழுத்த ஐயோ துன்பத்தை தாங்க முடியவில்லையே எனக் கதறுகிறோம் 


  ஆயுதப்பூஜைக்கு தொழிற்கூடங்களை சுத்தம் செய்வதுபோல் மனதை சுத்தம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும் சுத்தம் செய்வதென்றால் அன்பு கருணை போன்றவற்றால் இதயத்தை நிறப்புங்கள் என நான் உபதேசிக்க விரும்பவில்லை

  மறந்து விடுங்கள் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் துயரங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் தோல்விகள் என எல்லாவிதமான எதிர்மறைகளையும் மறந்து விடுங்கள்

 இறைவன் நமக்கு மறதியை தந்திருப்பது கடன் கொடுத்தவனை உதவி செய்தவனை ஆபத்து நேரங்களில் துணை நின்றவனை மறந்து போவதற்கல்ல நமது கஷ்டங்களையும் மற்றவர்களின் மீதுள்ள பகைமையும் மறப்பதற்குத்தான்

 இந்த மறதி என்ற நல்லப் பழக்கத்தை மனிதன் கடைபிடிக்கப் பழகும் போது துன்பத்திலிருந்து மீழ்கிறான் இது அறிவுரையல்ல என் அனுபவம்