Thursday, December 29, 2011

அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?

                                                                           
ரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும். 

அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது.  கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவார்கள்.  

    புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் அரச மரம் தான் என்பதை நினைவில் கொண்டால் அதன் மகத்துவம் என்னவென்று எளிதாக தெரியும்.  மரத்திற்கே இத்தகைய சக்தி என்றால் அதன் அடியில் இருக்கும் மூர்த்தியின் சக்தியை பற்றி சொல்லவே வேண்டாம்.  பிரபஞ்சத்தில் இருக்கும் பிரனவ சக்தியானது மிக சுலபமாக அரசமரத்தடி விநாயகரால் ஈர்த்து பக்தர்களுக்கு வழங்க முடியும். அதனால் தினசரி அரச மரத்தடி தொப்பை கணபதிக்கு தோப்புகரணம் போட்டு உடலை ஆரோக்கிய படுத்தி கொள்ளுங்கள்  

     எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் தங்களது விருப்படி ஆயிரமாயிரம் பெயர்களை சூட்டி மகிழ்வது இயற்கை.  அதனால் தான் ஓர் நாமம், ஓர் உருவம், இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம், ஆயிரம் உருவம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். 

   எத்தனை பெயர் சூட்டினாலும் சிறப்பித்து சொல்லப்படுவது சிலப்பெயர்களை மட்டும் தான்.  அதே போல பிள்ளையாருக்கு    ஏகதந்தர் ,சுமூகர், கஜகர்னர், கபிலர், லம்போதரர், விகடர், விநாயகர், விக்கன ராஜர், தூமகேது, கணத்தச்சர், கஜானனர், பால சந்திரர் என்று பன்னிரெண்டு திருநாமங்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment